யூ-டியூப் வீடியோக்களை பார்த்து கள்ள நோட்டு அச்சடித்ததாக 6 பேர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
முத்துகடையில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் அடகு வைத்த நகையை மீட்கச் சென்ற கணவன்-மனைவி கொடுத்த பணத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. வங்கி ஊழியர்கள் இதை சந்தேகித்து போலீசுக்கு தகவல் அளித்தனர்.
விசாரணையில், அந்த தம்பதியினர் தங்களிடம் இருந்த லாரியை வாங்கிய ராமு மற்றும் அஸ்கர் என்பவர்களிடமிருந்து அந்த பணத்தை பெற்றதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் பேரில், மேல்விஷாரத்தைச் சேர்ந்த இப்ராஹிம் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் யூ-டியூப் வீடியோக்களை பார்த்து கள்ள நோட்டு அச்சடிக்கும் முறையை கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தனர்.

போலீசார் இப்ராஹிம் குழுவிடம் இருந்து கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரம், கணினி மற்றும் அச்சு வடிவங்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் ராணிப்பேட்டை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ள நோட்டு தயாரிப்பு மற்றும் பரிவர்த்தனையில் ஈடுபட்டவர்களை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
