நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள எக்செல் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர்.
மொத்தம் 128 மாணவர்கள் கடந்த சில நாட்களாக வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளால் அவதிப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்லூரி மருத்துவமையம் மற்றும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
அனைத்து மாணவர்களும் தற்போது நலமாக உள்ளனர் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் உறுதிப்படுத்தினார்.
உணவுப் பாதுகாப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டபோது, சமையல் கூடம் மற்றும் குடிநீர் தொட்டிகளில் சுகாதார குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. உணவு மற்றும் தண்ணீர் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் சிலர் “மாணவர்கள் உயிரிழந்தனர்” என்ற போலி செய்திகளைப் பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
போலியான தகவல் பரப்பியவர்களுக்கு எதிராக சைபர் குற்றப்பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 
			 
			